தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சேர்த்தது சட்ட விரோத பணம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. இந்த வழக்கில் நீதிபதிகளாக பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகிய நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள்.
மே மாதம் 3ம் தேதி முதல் 5ஆம் தேதி, கர்நாடக அரசு தரப்பில் ஆன வாதத்தை பி.வி. ஆச்சார்ய முன் வைத்தார். அப்போது சசிகலா தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலம் ஜெயலலிதா சொத்துகள் சேர்த்தார் என்று வாதிட்டார். அதையடுத்து, அந்த வழக்கை ஜூன் 1ம் தேதி (இன்று) தள்ளி வைத்தார்.
இன்று நடக்கும் இறுதி வாதத்தில், அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, கார்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா சுமார் இரண்டு மணி நேரங்கள் வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பினர். முக்கியமாக, சசிகலா பேரில் பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா நடத்தினார் என்றும், அதன் மூலம் சொத்துக்கள் சேர்த்தார் என்றும் கூறும் நீங்கள், அந்த பணங்கள் ஜெயலலிதாவுடையது என்று நீரூபிக்க முடியுமா?
ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் கணிதப் பிழை இருப்பதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். ஜெயலலிதா சேர்த்துள்ள பணம் சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணம் என்பதற்கு ஆதாரத்தை சமர்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.