பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், ஜெயலலிதாவால் அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின் திட்டமாவது தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டதை நிரூபிக்க முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தனது தேர்தல் பரப்புரைகளின் போது தனது ஆட்சியில் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ளதாக கூறிவருகிறார்.
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட ஜெயலலிதா அரசால் திட்டம் தீட்டப்பட்டு, கட்டமைக்கப்பட்ட, மின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படவில்லை என்றார்.
தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும் 7485 மெகாவாட் மின்சாரத்தில் 5585 மெகாவாட் மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்திய தொகுப்பிலிருந்தும் கிடைக்கும் நிலையில் அதையெல்லாம் தமது அரசின் சாதனை என்று ஜெயலலிதா எப்படி கூற முடியும்? இப்படி சொல்வதற்கு நாக்கு கூச வேண்டாமா? என்றார் ராமதாஸ்.
மேலும் அதிமுக ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்திட்டமாவது தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டதை ஜெயலலிதாவால் நிரூபிக்க முடியுமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் சவால் விடுத்துள்ளார்.