தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலராக இருந்தவர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலராக இருந்த வி. கவுதமன், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ். கண்ணன், எலக்ட்ரீசியன் கேஎஸ். ரவி ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவர்கள் என்று கூறப்படுகிறது.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, BSNL நிறுவனத்தின் 300க்கும் அதிகமான உயர் வேக தொலைபேசி இணைப்புகளை அவரது சகோதரர் கலாநிதிமாறன் நடத்தும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து, சிபிஐ கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிம் கூறிய தயாநிதி மாறன், இந்த கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.