ஜெ. மருத்துவமனையில்: திமுக, காங்கிரஸ் உறவில் விரிசல்?
ஜெ. மருத்துவமனையில்: திமுக, காங்கிரஸ் உறவில் விரிசல்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்த விசாரணையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் இறங்கியுள்ளனர்.
இந்த சூழலில் தமிழக அரசியலில் சில மாற்றங்கள் ஏற்படுவது போல் ஒரு தோற்றம் உருவாகிறது. குறிப்பாக திமுக உடன் ஐக்கியமாக இருந்த காங்கிரஸ் சற்று விலகி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற வியூகத்தில் இருப்பது போல் உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவை அவரது நண்பரும் பிரதமருமான மோடி இன்னமும் பார்க்க வராத நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வந்து பார்வையிட்டார். இத்தோடு நின்றுவிடாமல் அவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு கிளம்பினார். இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் முதல்வர் ஜெயலலிதா குறித்தான மு.க.ஸ்டாலினின் கருத்துக்களுக்கு எதிர்மறையாகவே பேசி வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். பொறுப்பு முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் வேண்டும் என்கிறார் ஸ்டாலின், ஆனால் அவை தேவையில்லை என பேட்டியளிக்கிறார் திருநாவுக்கரசர்.
உள்ளாட்சி தேர்தலின் போது திமுக கூட்டணி காங்கிரஸ் கூட்டணியை கழட்டி விட்டு தமாகா உடன் சேரலாம் என நினைத்துள்ளது. அதனை கருணாநிதி மூலம் முறியடித்து கூட்டணியில் ஒட்டிக்கொண்டார் திருநாவுக்கரசர். ஆனால் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீட்டில் மிகவும் குறைவான இடங்களை ஒதுக்கி காங்கிரஸை சீண்டி பார்த்தது திமுக.
இந்த சூழலில் தான் தற்போது காங்கிரஸ் தான் இத்தனை நாளாய் அணிந்திருந்து சட்டையை கழற்றி வைத்துவிட்டு புது சட்டையை அணிய முயற்சி செய்து வருகிறது. தமிழக அரசியலில் இந்த கூட்டணியும் சாத்தியமே.