500, 1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள டிசம்பர் 30 வரை அவகாசம் வழங்கியுள்ளது.
புதிய 2,000 ரூபாய் நோட்டு வெளியான சில நாட்களில் அதை கலர் ஜெராக்ஸ் எடுத்து டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கிய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மதுரை உள்பட பல இடங்களில் 2,000 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வேலூரிலும் 2.000 ரூபாய் நோட்டு புழகத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாங்காய் மண்டியில் பழக்கடை வைத்திருப்பவர் வீரா(45). நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், 2000 நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக்கொண்டு மீதம் 1,750 பெற்று சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் அந்த பணம் கள்ளப்பணம் என்று தெரியவந்தது. இதையடுத்து வியாபாரிகள் அந்த வாலிபரை தேடியும் கிடைக்கவில்லை. 2,000 நோட்டுகளின் தன்மை குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்துகொள்ளாத நிலையில், கள்ளநோட்டு கும்பல் கைவரிசை காட்ட தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.