சேம் சைடு கோல் போடும் சுப்பிரமணியன் சுவாமி: அதிமுகவின் பின்னணியில் பாஜக தான் உள்ளது!
சேம் சைடு கோல் போடும் சுப்பிரமணியன் சுவாமி: அதிமுகவின் பின்னணியில் பாஜக தான் உள்ளது!
ஆளும் அதிமுகவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சி கலையும் சூழல் நிலவி வருகிறது. இந்த பிரச்சணைக்கு காரணம் அதிமுகவின் பின்னணியில் பாஜகவினர் சிலர் இருப்பதே என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் முதல்வர் பதவியை கைப்பற்ற முயன்றதும் போர்க்கொடி தூக்கியுள்ளார் பன்னீர்செல்வம்.
இருதரப்பினரும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். மிகவும் அசாதரணமான சூழலில் உள்ள அதிமுக. ஓபிஎஸின் பின்னணியில் திமுக இருந்து இயக்குகிறது என அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளார் சசிகலா.
ஆனால் பன்னீர்செல்வமோ தனக்கு பின்னால் திமுகவோ, பாஜகவோ யாரும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்.
தற்போது தமிழக அரசியலில் உள்ள குழப்பத்திற்கு காரணம் பாஜக தலைவர்கள் தான். இவர்கள் இரு தரப்பினருக்கும் பின்னால் இருக்கிறார்கள். மத்திய அரசோ, பாஜக தலைவரோ இதில் சம்பந்தப்படவில்லை. மற்ற பாஜக தலைவர்கள் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக இந்த விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.