வருகிற மே.5ம் தேதி முதல் கத்தரி வெயில் துவங்குகிறது.
இந்த ஆண்டு வெயில் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. மார்ச் மாதம் முதலே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வறுத்தெருக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே தயங்கி வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது தெற்கு தென்கிழக்கு பகுதியிலிருந்து ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது.
இந்நிலையில் கத்தரி வெயில்(அக்னி நட்சத்திரம்) மே 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது. அது மே 28ம் தேதி வரை நீடிக்கும். எனவே அந்த கால கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வெப்ப சலனத்தினால் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் இப்படி இருக்குறது என்றால் கத்தரி வெயில் காலத்தில் எப்படி இருக்குமோ என்று பொதுமக்கள் அஞ்சி வருகின்றனர்.