தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் சசிகலா அணி வெற்றி பெற்றது. அவரது ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அவர்களை பொதுமக்கள் மட்டுமின்றி உறவினர்கள் கூட தொடர்பு கொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். சசிகலா தரப்பின் இந்த செயலால் பொதுமக்கள் மிகவும் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டி எதிப்புகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஜெயம்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வும் உண்டு. அத்தொகுதி எம்.எல்.ஏ.வான ராமஜெயலிங்கம், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பொதுமக்கள் அவரது புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டினர். மேலும் சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராமஜெயலிங்கம் கூறியபோது, நான் இறந்துவிட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த நண்பர்களுக்கு நன்றி. அம்மா வளர்த்த கட்சி உடையக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் இந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார்.