வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்பு, அவர் பேசியதாவது:–
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து மக்களுக்கு தீராத இன்னல்களை கொடுத்துவிட்டது. குறிப்பாக கடலூரும், சென்னையும் ரொம்பவே பாதித்துவிட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சிறப்பாக உதவி செய்துள்ளது. மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்களும், அதிகாரிகள் குழுவும் நேரில் சென்று மக்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்களை அதிமுக தலைமைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.