தமிழ்நாடு மின்வாரியத்தில் இரண்டாம் கட்டமாக 6 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப் பட்டனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். தங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, தற்காலிக ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக அரசு 2007ஆம் ஆண்டு அறிவித்தது. அதன் படி 21,600 ஒப்பந்தத் தொழிலாளர்களை படிப்படியாக நிரந்தரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, 6 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செப்டம்பர் 2007 முதல் ரூ.2,570, ரூ.3,950 மற்றும் ரூ.3,050, 5,070 என்ற ஊதிய நிலைகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக, 6 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஜூன் 3ஆம் தேதி முதல் நிரந்தரப்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதியின் 86வது பிறந்தநாளையொட்டி, 86 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வழங்கினார். மீதியுள்ள ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் நிரந்தரமாக்குவதற்கான உத்தரவு அனுப்பி வைக்கப்படும்.
இந்த முடிவால், மின்வாரியத்துக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி அதிகம் செலவாகும் என்று தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.