5 மாவட்டங்களில் பொறியியல் கல்லூரி: பொன்முடி அறிவிப்பு
சென்னை , புதன், 24 ஜூன் 2009 (17:00 IST)
கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சை, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப் படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு :கடந்த ஆண்டு திருக்குவளை, அரியலூர், பண்ருட்டி, ராமநாதபுரம், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இடங்களில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவை சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.2009-10
ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவித்து உள்ளவாறு அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புதிதாக இந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை அரசு உறுப்பு கல்லூரிகளாக தொடங்கப்படும். இதன் மூலம் 1,500 மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.2007
ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் அறிவித்ததிட்டத்தின்படி தமிழ் நாட்டில் தேனி, மதுரை, பெரம்பலூர், திருவண்ணா மலை, தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாலிடெக்னிக்கல்லூரிகள் தொடங்கப் படும். ஒவ்வொன்றுக்கும் ரூ. 12.3 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இவற்றை தொடங்க நட வடிக்கை எடுக்கப்படும்.அரசு கல்லூரிகளில் கல்வி தரத்தை மதிப்பீடு செய்ய தணிக்கை அவசியம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி மூத்த கல்வியாளர்கள் குழு நியமிக்கப்படும். அவர்கள் அரசு கல்லூரிகளுக்கு சென்று கல்வி தணிக்கை செய்வார்கள். இந்த முறை தமிழ்நாட்டில் தான் முதல் தடவையாக நடைமுறைப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.