நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிதிமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் தான் ஜெயலலிதா முதல் முறையாக வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்கு சென்றார். எனவே தான் இந்த மாவட்டத்தை கோட்டை என்கிறேன்.
யாருடைய ஆதரவும் இன்றி தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தனியாக நின்று உள்ளாட்சித் தேர்தலில் 93 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளார். ஒரு லட்சம் பேர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளனர்.
டெசோ மாநாடு நடத்த கருணாநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது. அவர் முதல்வராக இருந்தபோது தான் இலங்கையில் 1 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் அப்பொழுது கைகட்டி அமைதியாக வேடிக்கை பார்த்து விட்டு இப்பொழுது பேசி என்ன பயன்?
இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் வலிமை என்பது கிடையாது. இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கடந்த பொது தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஜெயலலிதா தான் வேட்பாளர். அவர் முதல்வராக வாக்களியுங்கள் என்று தான் கோரி வந்தோம். தற்பொழுது இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதாவே போட்டியிடுகிறார் என வாக்குகள் சேகரித்து 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி பிரதமராக ஜெயலலிதா வருவதற்கும் நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று பன்னீர் செல்வம் பேசினார்.