இது தொடர்பாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையாளர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளஸ்2 முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதையடுத்து, 26, 27 ஆகிய தேதிகளில் விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திருத்தணி அரசு கலைக்கல்லூரி ஆகிய 5 இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பன்னாட்டு செல்போன் நிறுவனம் பயிற்சி ஆபரேட்டர் வேலைக்கு 1500 பேர்களை தேர்வு செய்ய உள்ளது.
பிளஸ்2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். வயது 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.4 ஆயிரம். அத்துடன் இலவச உணவு, மருத்துவ வசதி, 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பேருந்து வசதி உண்டு.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க எவ்வித பதிவுகட்டணமும் கிடையாது. பிளஸ்2 முடித்த பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.