சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட ஏரி, கால்வாயை புனரமைக்க ரூ. 31 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நீர்வள நில வளத் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், 2547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6.17 லட்சம் எக்டேர் பாசனப் பரப்பு பயனடையும் வகையில் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.இதில் 1570 கோடி ரூபாய் நீர்வள ஆதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உப வடிநில கட்டமைப்பு முறையில், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மையின் மூலம் பாசன நீர் வழங்கும் சேவை மற்றும் பாசன நில வேளாண் உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.
4,848 ஏரிகள், 668 அணைகட்டுகள், 7,893 கிலோ மீட்டர் நீர்வழங்கு கால்வாய்களை புனரமைத்து சீர்படுத்துவதன் மூலம் ஏரிப்பாசன முறையை நவீனமயமாக்குதல் மற்றும் கால்வாய்ப்பாசன அமைப்பை மேம்படுத்துதல் போன்ற பணிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் நீர் மேலாண்மை மூலம் அதிக மகசூல் பெறத்தக்க வகையில், தேவையான நீரை மட்டுமே பயன்படுத்தி, மீதமாகும் நீரை அதிக பாசனப் பகுதிகளுக்கு அளித்து விவசாயிகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப் படுகிறது. மேலும் நீரை பயன்படுத்துவோர் மூலமாக நீர்பாசனச் சங்கங்கள் அமைத்து அவர்களின் ஈடுபாட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, சிவகங்கை, விருது நகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பரளையாறு உப வடிநிலத்தின் கீழ் உள்ள முறை சார்ந்த மற்றும் முறைசாரா ஏரிகள் மற்றும் நீர் வழங்கு கால்வாய்களை ரூ. 31 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்திட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.
பரளையாறு உப வடி நிலத்தின் கீழ் உள்ள ஆயக் கட்டு நிலங்களுக்கு நீர் வழங்கும் முறையை செம்மையாக்க அதன் கட்டமைப்பை நவீனப்படுத்த பின்வரும் பணிகள் இத்திட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன:
210 மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல், 54 மதகுகளை சீர் படுத்துதல், 15 சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல், 14 சிற்றணைகளை சீர் படுத்துதல், 219.872 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரைகளை பலப்படுத்துதல், 121.715 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்வழங்கு கால் வாய்களை தூர்வாருதல், 12,144 மீட்டர் நீளத்திற்கு பாசனக் கால்வாய் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை வட்டம், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி வட்டம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, கமுதி, முதுகளத்தூர், கடலாடி வட்டங்களிலுள்ள 18 முறைசார்ந்த ஏரிகளின் கீழ் உள்ள 4755.22 எக்டேர் நிலங்கள், 71 முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள 6128.72 எக்டேர் நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும் என்று கூறப்பட்டுள்ளது.