கோடானுகோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து, மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய, மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது ஊர் உலகத்தை ஏமாற்றத்தானே? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வினா எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதிலுரையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருக்கின்ற மனுவையே தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறினால், அந்த மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதாகத்தானே பொருள்? மூவரின் தூக்கு தண்டனையை எதிர்க்கின்ற பொது மக்களின் கருத்து பற்றி, உணர்ச்சி பற்றி, இந்த அரசு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது.
அப்படியானால், ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், கோடானுகோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து, மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய, மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுகின்றது என்று சொன்னது, ஊர் உலகத்தை ஏமாற்றத்தானே? இந்தப் பிரச்சனையில் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார்.
தமிழக அமைச்சரவையில், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அம்முடிவை அறிவித்து, மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய, அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவும், 161-வது பிரிவும், அதிகாரம் அளிக்கின்றது.
உண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை இருந்தால்தானே அதைச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்? நீதிமன்றத்தில் முழு முயற்சிகளில், நாங்கள் ஈடுபட்டு உள்ளோம். மூவரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என்று வைகோ கூறியுள்ளார்.