பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் வரும் 5ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள் போன்றவர்கள், மாணவர்கள், கலைத்துறையினர், வணிகர் சங்கங்கள் போன்றவர்கள் போராடி வந்தனர்.
இதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடியதாகும்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி பா.ம.க சார்பில் தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பும், தாசில்தார் அலுவலகம் முன்பும் வரும் 5ஆம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.