மணல் அள்ளும் வேளையில் ஈடுபட்டபோது கிடைத்த 206 புதையல் வெள்ளி காசுகளை 7 பேரிடமும் இருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்துள்ள பூண்டியில் அருகே, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அருகே கடந்த ஆண்டு பொக்லைன் உதவியுடன் குவாரிக்கு மணல் வாரிக்கொண்டிருந்தபோது பாலாற்றின் மையப்பகுதியில் புதைந்திருந்த 3000 ஆண்டுகள் பழமையான அத்திமரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அதன் அருகே கடந்த 26ஆம் தேதி சிருகரும்பூர் காலனியை சேர்ந்த பெருமாள், வெங்கடேசன், ஆனந்தன், மூர்த்தி, பாபு, கார்த்தி, ராஜேஸ் ஆகியோர் டிராக்டரில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மணலில் இருந்து மண்கலசம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதனை யாருக்கும் தெரியாமல் அவர்கள் மறைத்து வைத்திருந்துள்ளனர். பின்னர் அதனை உடைத்து பார்த்த போது வடமொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளிக்காசுகள் இருந்துள்ளன.
இந்த காசுகளை 7 பேரும் பங்கு போட்டு பிரித்துக் கொண்டனர். இந்த பங்கீட்டில் அத நபர்களுக்குள் மனஸ்தாபர் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து மற்றவர்களிடம் போதையில் உளறியுள்ளனர். இதானல் இந்த விஷயம் கிராம மக்களிடையே பரவியுள்ளது.
இந்த தகவல் சிறுகரும்பூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு சென்றுள்ளது. பின்னர் இது குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இதன்பேரில் அதிகாரிகள் 7 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் 7 பேரிடமும் மொத்தம் 206 வெள்ளி காசுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காசுகள் வேலூர் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.