கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
இதை அடுத்து, அவரது உடல் நிலை குறித்து, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக வதந்திகள் தீவிரமாக பரப்பப்பட்டன.
இது தொடராக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் 43 வழக்குகளை போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் முதல்வரின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக தெரியவந்ததை அடுத்து, காவல்துறையினர் அவர்கள் இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.