மதுரையில் 2.94 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
மதுரையில் 2.94 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 2.94 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் வைத்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அதனை பார்வையிட உள்ளார்.
மதுரை செக்கானூரணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேனில் கொண்டு வரப்பட்ட இந்த 2.94 கோடி ரூபாய் சிக்கியது. சவுத் இந்தியன் வங்கிக்கு சொந்தமான பணம் என்று கூறப்பட்டாலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆதாரம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் மாவட்டம் முழுவதும் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டு பணம் கடத்தப்படுவதை கண்காணித்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் என கூறப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னும் சற்று நேரத்தில் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் இந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.