மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டும் என்று கட்சியினரை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் வரும் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், பகுதிகளிலும், கட்சியின் அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி,
அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின்பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், “டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.