நடிகர் ரஜினிகாந்துக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை இல்லை என்று கூறிய மருமகன் நடிகர் தனுஷ், 10 நாட்களில் அவர் சென்னை திரும்புவார் என்றார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமனார் ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் நலமாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு மிக சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால்தான் அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற முடிந்தது. அவருடைய உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருடைய நோய்க்கான மூல காரணத்தை சிங்கப்பூர் டாக்டர்கள் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கிறார்கள். அதை குணப்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
அவருடைய நுரையீரலில் இருந்த பிரச்சினை எப்போதோ குணப்படுத்தப்பட்டு விட்டது. இப்போது அவர் எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறார். டி.வி.யில் படம் பார்க்கிறார். எழுந்து நடக்கிறார். மூன்று நாட்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்துவிடுகிற அளவுக்கு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றது போல் இருக்கட்டும் என்று நாங்களாகத்தான் அவரை மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் உட்கார வைத்து இருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அவர் சென்னை திரும்பி விடுவார். இங்கே வந்ததும் அவர் ஒரு அறிக்கை விட இருக்கிறார்.
ரஜினிகாந்துக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவைப்படவில்லை. அப்படி சொல்லப்படுவது ஒரு ஜோக்தான். ரஜினிகாந்த் பற்றி இணையதளங்களிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் வருகிற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், ராணா படப்பிடிப்பு 100 சதவீதம் நிச்சயமாக நடக்கும்.
சிங்கப்பூர் சிகிச்சை பற்றி என் மாமியாரிடம் அமிதாப்பச்சன் பேசியிருக்கிறார். அதுபற்றி எனக்கு தெரியாது. எனக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி பெருமையாக இருக்கிறது என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். இந்த விருதை நான் எதிர்பார்த்தேன் என்றும் ரஜினிகாந்த் கூறியதாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.