என்.எல்.சி.யில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக சென்னையில் நடைபெற்ற 10வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்று 29வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, என்.எல்.சி. ஒப்பந்தத்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக சென்னையில் நேற்று நடைபெற்ற 10வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
தொழிற்சங்கங்கள் முன் வைத்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க நிர்வாகத் தரப்பில் முன் வரவில்லை. இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் மத்திய மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் 2 பொது மேலாளர்களும், 8 தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். என்.எல்.சி முதலாவது சுரங்கம் முன்பு இன்று நிரந்தர தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதம் எதும் நிகழாமல் இருக்க காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.