அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் மணியரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் கூறியிருந்தால், அதை வரவேற்றிருக்கலாம்.
அமெரிக்க தீர்மானத்தில் ராஜபக்ச குழுவினர் மீது பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை எதுவும் கோரவில்லை என்றும், தமிழர் இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான தொடக்க நிலை முயற்சி எதுவும் இந்த தீர்மானத்தில் இல்லை.
மனித உரிமை விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிவுரைகளை இலங்கை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் தீர்மான வாசகம் கூட நீக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த தீர்மானத்தை இன்னும் பலவீனப்படுத்திய பிறகே ஆதரிக்கப் போவதாக இந்தியா முடிவெடுத்துள்ளது. இதனால் ஈழத்தமிழர்களுக்கு சிறு நியாயமும் கிடைத்துவிடப் போவதில்லை என்று மணியரசன் தெரிவித்துள்ளார்.