விவசாயிகளின் தகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிக் கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்துடன் நடப்பு ஆண்டில் மேலும் 20 புதிய கால்நடை மருந்தகங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடை பராமரிப்புத் தொழிலுக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கும் கோழி வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சங்கரன் கோவில் மண்டலம் என இரு புதிய கோழி பண்ணைத் தொகுப்பு மண்டலங்களை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, இந்த மண்டலங்களில் உள்ள 7 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் அவர்களின் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிக் கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 230 பண்ணைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்த, 2 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட 35 பண்ணைகள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.