விதிமீறி வனப்பகுதியில் கட்டிடம் - ஈஷா, காருண்யா உள்பட 15 அமைப்புகளுக்கு தமிழக அரசு நோட்டீஸ்
, திங்கள், 14 ஜனவரி 2013 (12:52 IST)
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள ஈஷா உள்பட 15 தனியார் அமைப்புகளுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசின் நகர வளர்ச்சி திட்டத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக அத்துறையின் ஆணையர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈஷா யோகா மையம், இண்டஸ் பொறியியல் கல்லூரி, தாமரா ரிசார்ட்ஸ், சின்மையா சர்வதேச உறைவிடப் பள்ளி, மாதா அமிர்தானந்தாமயி கல்வி நிறுவனம் ஆகியவை போதிய அனுமதியின்றி பெரிய அளவில் கட்டடங்களை கட்டியுள்ளது குறித்தும், அதனால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புதிய தலைமுறையில் செய்திகள் வெளியானது.இந்த நிலையில், விதிகளை மீறி கட்டடம் கட்டிய இந்த நிறுவனங்கள், மற்றும் பிளாக் தண்டர் பொழுதுபோக்கு மையம், காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா சர்வதேசப் பள்ளி, கோவை கலைமகள் கல்லூரி, சான் சர்வதேச வணிகக் கல்லூரி, கோவை மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன், ஈஷா யோகா பள்ளிகள், இவான்ஜலின் மேல்நிலைப்பள்ளி ஆகியவை உட்பட 15 அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.