விஸ்வரூபம் - கமலுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது!
, சனி, 2 பிப்ரவரி 2013 (15:33 IST)
விஸ்வரூபம் பட பிரச்சனை தொடர்பாக சென்னை விரைந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது தலைமைச் செயலகத்தில் நடக்கும் முத்தரப்பு பேச்சுவார்தையில் பங்கேற்றுள்ளார்.தமிழ்நாடு தவிர இந்தியா முழுவதும் நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கி தயாரித்துள்ள விஸ்வரூபம் படம் வெளியாகியுள்ளது. இஸ்லாமியர்களின் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதித்தது.இதையடுத்து நீதிமன்றம் சென்ற கமல்ஹாசன், படத்தை வெளியிட அனுமதி பெற்றார். ஆனால் தமிழக அரசு மேல்முறையீடு செய்து மீண்டும் தடை பெற்றது.இதனால் ஆத்திரம் அடைந்த கமல்ஹாசன், தமிழகத்தை விட்டு வெளியேறுவேன் என்றும், காஷ்மீர் முதல் கேரளா வரை உள்ள மதசார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்றும் இல்லையென்றால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்றும் ஆவேசத்துடன் கூறினார்.இதையடுத்து, விஸ்வரூபம் படப் பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசனும், முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றாக அமர்ந்து பேசி சுமுக தீர்வுகாண முன்வந்தால் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றார்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பினர் கூறினர்.இதையடுத்து, மும்பையில் இருந்த நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விரைந்தார். தற்போது தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.தமிழக உள்துறை செயலர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் 24 இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுமா? அல்லது இழுபறி ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.