குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி அ.இ.அ.தி.மு.க சார்பில் விழுப்புரத்தில் வரும் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குழந்தை கடத்தல் தற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. குழந்தை கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை காவல் துறை கைது செய்து விசாரித்த போது, இதன் பின்னால் ஒரு பெரிய கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருப்பதும், குறிப்பாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பிறந்த குழந்தைகள் அதிக அளவில் கடத்தி விற்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பான விசாரணை முடிவுறாத சூழ்நிலையில், கடத்தல் கும்பல் குழந்தைகளை வெளி மாநிலம் மற்றும் அயல்நாட்டிற்கு விற்றிருக்கலாம் என்று காவல்துறை கூறியுள்ள சூழ்நிலையில், குழந்தைகள் வெளி மாநிலத்திற்கும், அயல்நாட்டிற்கும் கடத்தப்படவில்லை என்று ஒரு காவல்துறை உயர் அதிகாரி அண்மையில் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
காவல்துறை உயர் அதிகாரியின் இது போன்ற பேட்டி இந்தக் கடத்தல் சம்பவத்தை மூடி மறைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தப் பேட்டிக்குப் பிறகு, 2008 ஆண்டு கடத்தப்பட்ட ஒரு ஆண் குழந்தையை காவல்துறை பெங்களூரிலிருந்து மீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை கடத்தல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதி, மயிலம் ஒன்றியத்தில் உள்ள நெடிமோழியனூர் கிராமத்தில் கடந்த நான்கு மாத காலமாக வீடுகள் திடீர் திடீர் என்று தீப்பற்றி எரிந்து வருகின்றன. நின்று கொண்டிருக்கின்ற ஆடு, மாடுகள் தீப்பிடித்து எரிகின்றன. இதே போன்ற சம்பவம் வல்லம் ஒன்றியம், கட்டாஞ்சிமேடு கிராமத்திலும் நடந்திருக்கிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
மேற்படி கிராம மக்களின் அச்சத்தைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் மைனாரிட்டி தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை. இதே போன்று, திண்டிவனத்தை அடுத்த மயிலம் ஒன்றியம், சித்தணி கிராமத்தில் ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தொடர்பு இருக்கிறது என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் தமிழ் தீவிரவாத அமைப்பு இந்தச் செயலை செய்திருக்கலாம் என்று சொல்லப்பட்டது. கடைசியாக நக்சலைட்டுகள் இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதுவரை உண்மைக் குற்றவாளிகளை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.
எனவே, குழந்தை கடத்தல் கும்பலை பிடிப்பதில் ஆர்வம் காட்டாத, அடிக்கடி வீடுகள் தீப்பற்றி எரிவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்காத, திண்டிவனத்தை அடுத்த மயிலம் ஒன்றியம், சித்தணி கிராமத்தில் இரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்திய குற்றவாளிகளை கண்டுபிடிக்காத, தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்துக் குற்றவாளிகளையும் கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க வலியுறுத்தியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 26ஆம் தேதி காலை 10 மணி அளவில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா தலைமையிலும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் சி.வி. சண்முகம் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.