தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மேலாளர் தாக்கப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யக்கோரி நடிகர் வடிவேலுவுக்கு தாக்கீது அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உறவினர் ஒருவர் 2007ஆம் ஆண்டு இறந்து போனார். அவரது வீட்டுக்கு எதிரில் நடிகர் வடிவேலுவின் அலுவலகம் உள்ளது.
அப்போது விஜயகாந்தின் ஆதரவாளர்களுக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும் இதில் விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரை விருகம்பாக்கம் காவல்துறையில் விசாரிக்கவில்லை என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு, அவரது மகன் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றம்சாற்றி அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தக் கோரி சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி ஜெயபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதிலளிக்க கோரி நடிகர் வடிவேலுவுக்கும், விருகம்பாக்கம் காவல்துறையினருக்கும் தாக்கீது அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.