மீண்டும் வெடித்தது சாதி மோதல் - விழுப்புரத்தில் தலித் வீடுகள் சூறை, 20 பேர் காயம்
, வெள்ளி, 14 டிசம்பர் 2012 (15:03 IST)
தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் சாதி மோதல்கள் இன்னும் தணியாத நிலையில், விழுப்புரத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதோடு 20 பேர் படுகாயம் அடைந்தனர்.கோட்டக்குப்பம் அருகேயுள்ள கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் மற்றொரு பிரிவினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இதுபற்றி வெங்கடேசன் தரப்பு மக்கள், எதிர்தரப்பிடம் கேள்விகேட்டபோது கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் கும்பலாக திரண்டுவந்த எதிர்தரப்பினர், தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளையும் பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதலில் 20 பேர் காயமடைந்தனர். இவர்கள் புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இரு தரப்பினர் மோதிக் கொண்டதை அடுத்து 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் கழுப்பெரும்பாக்கம் கிராமத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கியதாக எதிர்தரப்பைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் கோட்டக்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.