பி.எஸ்.எப். சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
, வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (15:37 IST)
எல்லை பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மே 5ஆம் தேதி நடக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.இது தொடர்பாக பிரதமருக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக கடந்த 16ஆம் தேதி டெல்லியில் நடந்த முதல்வர்கள் மாநாடு நம்பிக்கையுடன் முடிவடைந்தது. மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வரும் பொது அமைதி மற்றும் போலீஸ் துறையில் மத்திய அரசு தலையிடும் வகையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் உறுதி அளித்தது. அதுதான் இந்த நம்பிக்கைக்கு காரணம் அதன்படி, மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று மாநில அரசுகள் நம்பிக்கை கொண்டுள்ளன.முதல்வர்கள் தெரிவித்த கருத்துக்கள் மீது அர்த்தமுள்ள ஆலோசனைகள் நடத்தி, முரண்பாடில்லாத நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். முதல்வர்கள் மாநாட்டில் விவாதத்துக்கு வைக்கப்பட்ட, எல்லை பாதுகாப்பு படை சட்டம், 1968-ல் திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை வெளிச்சத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட இந்த மசோதா துணை விவாத பொருளாகவே சேர்க்கப்பட்டு இருந்தது.மேலும், துணை விவாத பொருள் குறிப்புகள், மாநாடு நடந்த அன்று தான் எங்களுக்கு தரப்பட்டது. இதனால் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்துக்களில், இந்த விஷயம் தொடர்பான எனது பதில் இடம் பெறவில்லை. அந்த வகையில், எல்லை பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா, துணை விவாத பொருளாக சேர்க்கப்பட்டதில், எனது அதிருப்தியை பதிவு செய்ய விரும்புகிறேன்.எல்லை பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா விவகாரத்தை, முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி.க்கள் மார்ச் 29ஆம் தேதி வலியுறுத்தி கூறினர். அப்படி அவர்கள் வலியுறுத்தி சொன்ன இரண்டு வாரங்களுக்கு பிறகுதான் முதல் அமைச்சர்களின் மாநாடு கூட்டப்பட்டது.இந்த விஷயம், இரண்டு வார காலத்துக்கு மேல், அவர்கள் கவனத்தில் இருந்தும் உள்துறை அமைச்சகம் துணை விவாதப் பொருள் இனமாக இதை சேர்த்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் போலவே, இந்த விஷயமும், மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் விதமாக, கொல்லைப்புறமாக நுழையும் முயற்சியாகும். எனது வேண்டு கோளை எற்று, தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் பற்றி விவாதிக்க வருகிற 5ஆம் தேதி முதல்வர்கள் மாநாட்டை தனியே கூட்டு மாறு உள்துறை அமைச்சருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.எல்லை பாதுகாப்பு படையின் உத்தேச சட்ட திருத்த மசோதாவும், ஒரே நோக்கத்தை கொண்டுள்ளதால், மாநாட்டில் இதுபற்றியும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இதன் மீது முதல்வர்களின் கருத்துக்களை அறிந்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, இந்த மசோதா மீது டெல்லி மேல் சபையில் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற் கொள்ளப்படக்கூடாது; நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து தங்களின் விரைவான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.