மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 1ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, தனக்கு வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சன் டி.வி.க்காக பயன்படுத்தினார் என்று ஜெயலலிதா பேசியதாக செய்தி வெளியானது. இந்தப் பேச்சு தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் அவதூறு புகார் அளித்தார்.
சென்னை எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் சேதுமாதவன், இந்தப் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இவ் வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா ஜூலை 1ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பவும் சேதுமாதவன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தான் அரசியல் கட்சித் தலைவராக உள்ளதால், அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும்.
மேலும், என் மீதான புகாரில் முதற்கட்ட ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு. எனவே, தயாநிதி மாறன் தொடுத்த வழக்கையும், நீதிமன்றம் அனுப்பிய சம்மனையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா கோரி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும், தயாநிதி மாறன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராயினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் ஜூலை 1ஆம் தேதி ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். அத்துடன், இந்த மனுவுக்கு பதில் அளிக்க கோரி தயாநிதி மாறனுக்கு தாக்கீது அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு அடுத்த மாதம் 8ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.