தேர்தல் நேரத்தின் போது தி.மு.க. நடத்திய முழு அடைப்பு, முதலமைச்சர் கருணாநிதி இருந்த உண்ணாவிரதம் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமீறல் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் நேரத்தின்போது இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தி.மு.க. சார்பில் ஏப்ரல் 23ஆம் தேதி முழு அடைப்பு நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியும் ஏப்ரல் 27ஆம் தேதி அண்ணா சமாதி உள்ள வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த செயல் தேர்தல் நடத்தை விதிமீறிய செயலாகும். எனவே, தி.மு.க. கட்சி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராப்பிக் ராமசாமி பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வது குறித்து பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் முருகேசன், வெங்கட்ராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பதில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''தேர்தல் சமயத்தின் போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தேர்தல் நடத்தை விதி கொண்டு வரப்பட்டன. ஆனால், அரசியல் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் நடத்தும் உண்ணாவிரதம், முழு அடைப்பு பற்றி அதில் கூறிப்பிடப்படவில்லை.
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட காலக்கட்டத்தின் போது தி.மு.க. நடத்திய முழு அடைப்பு, உண்ணாவிரதத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படவில்லை. அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தியதாக மனுதாரர் எந்த குற்றச்சாற்றும் கூறவில்லை. முழு அடைப்பு நடத்தும் அரசியலின் பதிவை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே, தி.மு.க. நடத்திய முழு அடைப்பு, அதன் தலைவர் நடத்திய உண்ணாவிரதம் தேர்தல் நடத்தை விதிமீறல் அல்ல. எனவே அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் மனு நிராகரிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
மனுதாரர் தரப்பில் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.