கோவை சிறையில் இருக்கும் மார்டின் மீது விமானத்தில் லாட்டரி கடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் ஒரு கண்டெனரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதாக கடந்த மாதம் 13ம் தேதி கோவை பீளமேடு காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான தனிப்படையினர் விமான நிலையத்திற்கு சென்று குறிப்பிடப்பட்ட கண்டெய்னரை சோதனை செய்தனர். அதில் 30 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆனந்த் என்பவர் இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு ஆனந்தை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆனந்தை பீளமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்த கடத்தலுக்கு முக்கிய காரணம் மார்டின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று அங்கு ஏற்கனவே பல வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல லாட்டரி அதிபர் மாட்டினை கைது செய்து அதற்கான உத்தரவை அவரிடம் வழங்கினர்.
மேலும் இந்த வழக்கில் அவரது நண்பர் கணேசனும் கைது செய்யப்பட்டார். இதில் தலைமறைவாகி உள்ள மார்ட்டினின் மைத்துனர் ஜான்பிரிட்டோவை போலீசார் தேடி வருகின்றனர்.