''விநாயகர் சிலையின் உயரம் அதிகபட்சம் 10 அடியாகத்தான் இருக்க வேண்டும்'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, விநாயகர் சிலைகள் அமைக்கும் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் அமைக்க வேண்டும் என்றார்.
ஒரு விநாயகர் சிலையின் உயரம் அதிகபட்சம் 10 அடியாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிய திரிபாதி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்ட வாரியம் அளித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விநாயகர் சிலைகளை பாதுகாக்க 20 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் சிலையை பாதுகாக்க வேண்டும் என்றும் திரிபாதி கேட்டுக் கொண்டார்.