இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை பற்றி மக்களுக்கு விளக்கக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்காக புதிதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியுள்ள 'நாம் தமிழர்' என்ற புதிய அமைப்பு சார்பில் நடை பயணம் இன்று தொடங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இதில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இன்று மாலை நடைபயணமாக காஞ்சிபுரம் செல்லும் திருமாவளவன், அங்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
சென்னையில் அடையாறு வேளச்சேரி, சைதாபேட்டை, தியாகராயநகர், கே.கே.நகர், மயிலாப்பூர், புளியந்தோப்பு ஆகிய 7 இடங்களில் இன்று காலை நடைபயணம் தொடங்கியது.
கே.கே.நகர், வேளச்சேரி, அடையாறு ஆகிய இடங்களில் நடந்த நடைபயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் சோழநம்பியாரும், சைதாப் பேட்டையில் தமிழ்சுடர் ஒளியும், மயிலாப்பூரில் எழில் கரோலினும் துவக்கி வைத்தனர்.
புளியந்தோப்பில் பாவலன், திலீபன், கவுதம், மாவட்ட செயலர் வீரமுத்து, வன்னி அரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் சென்றனர். அப்போது இலங்கைக் தமிழர்களை காக்க கோரி கோஷம் எழுப்பினார்கள்.
இதேபோல் தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நடைபயணத்தை தொடங்கினர்.