9 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்த கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, தற்போது கார் திருட்டு போய்விட்டதாக அவர் கூறுவதாக பைனான்சியர் ஒருவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் அசோக்குமார் (40). பைனான்சியரான இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், நடிகை புவனேஸ்வரி மீது கொடுத்த புகார் மனுவில், ரூ.9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை மாதம் ரூ.40 ஆயிரம் வாடகைக்கு நடிகை புவனேஸ்வரி எடுத்து, அவரது பொறுப்பில் வைத்து ஓட்டி வந்தார்.
முதல் மாத வாடகை மட்டும் கொடுத்த புவனேஸ்வரி, அதன்பிறகு கடந்த 10 மாதங்களாக வாடகையும் கொடுக்காமல், காரையும் திருப்பி ஒப்படைக்காமல் ஏமாற்றி வருகிறார். தற்போது அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, தியாகராயநகர் துணை ஆணையருக்கு காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த புகாரை நடிகை புவனேஸ்வரி மறுத்துள்ளார். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் பட தயாரிப்பு பிரச்சனையில் குறிப்பிட்ட கார் திருட்டு போய் விட்டதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
2 மாதத்தில் காரை மீட்டு கொடுத்து விடுவேன் என்றும், இல்லாவிட்டால் காருக்கான பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அசோக்குமார் என்னை அவதூறாக திட்டினார் என்று கூறியுள்ள புவனேஸ்வரி, அதை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன் என்றும் இந்த புகாரை சட்டபூர்வமாக சந்திக்க தயார் என்றும் கூறினார்.