மாநில கண்காணிப்பு ஆணையம், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றுக்கு தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பணியாளர்கள் நலன் மற்றும் நிர்வாக சீர்துறை செயலர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள மாநில கண்காணிப்பு ஆணையம் லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டம் பொருந்தாது என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த இரண்டு துறைகளுக்கும் விதிவிலக்கு வழங்கியது தவறு என்று மனுவில் கூறியிருந்தார்.'
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்தனர். தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்து இரு துறைகளுக்கும் விதிவிலக்கு வழங்கி அரசு உத்தரவிட்டது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில், இரண்டு துறைகளும் பொது ஊழியர்கள் பற்றி புலன் விசாரணை செய்து வருகிறது. புலன் விசாரணை முடிவில் ஒழுங்கு நடவடிக்கை, குற்ற நடவடிக்கை ஆகியவை எடுக்கப்படும். ஆகவே, தொடக்கத்தில் இருந்தே வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்வரை பல வழக்குகளில் ரகசியத்தை காக்க வேண்டியுள்ளது.
ஆரம்பக் கட்டத்திலேயே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விடயங்களை வெளிப்படுத்தினால் புலன் விசாரணையின்போதும், வழக்கு விசாரணையின்போதும் குழப்பத்தையும், பாதகத்தையும் ஏற்படுத்தும் என்று அரசு உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் கூறும் காரணம் ஏற்கக்கூடியதாக உள்ளது. ஆகவே, இரண்டு துறைகளுக்கும் விதிவிலக்கு வழங்கியது சரிதான். எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.