நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா- அஸ்வின் ராம்குமார் திருமணம் சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
எழும்பூரில் உள்ள ராணிமெய்யம்மை மண்டபத்தில் வைதீக முறைப்படி நடைபெற்ற திருமண விழாவில் காலை 8.25 மணிக்கு மணமகன் அஸ்வின் மணமகள் செளந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது அங்கு குழுமியிருந்த உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், நல்லகண்ணு, ஆர்.எம்.வீரப்பன், நடிகர்கள் தனுஷ், சிவகுமார், இயக்குனர்கள் பாலசந்தர், மணிரத்னம், தெலுங்கு நடிகர்கள் மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சரத்குமார், ராதிகா, இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் திருமண விழாவில் பங்கேற்றனர்.
இன்று மாலை இதே திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.