'உலக மனித உரிமை நாள்' நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் கருணாநிதி, ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்போம்; மனித உரிமைகள் காப்போம் என இந்நாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலக மனித உரிமை நாள்’ செய்தி மண்ணின் மைந்தர் அனைவர்க்கும் அறவழியில் மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன், வாழ உரிமை உண்டு; அதைத் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்த்திடும்நோக்கில், ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 10ஆம் நாள் 'உலக மனித உரிமை நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதனை வைத்தே மனிதனே இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய அந்நாள் முதல், மனித மலத்தை மனிதனே தலையில் சுமக்கும் கொடுமையிலிருந்து அருந்ததிய சமுதாயம் விடுதலை பெற, அவர்களுக்கு மாற்றுத் திட்டங்கள் பலவற்றை நடைமுறைப் படுத்துவதுடன், மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி உயர்கல்வி பெற, அரசுப் பணிகளில் நியமனங்கள் பெற வழிவகுத்துள்ள இந்நாள் வரை இந்த அரசு உருவாக்கியுள்ள பல திட்டங்கள் மனித உரிமைகளை நிலைநாட்டிட வேண்டுமென்னும் உணர்வோடு வகுக்கப்பட்டுள்ள திட்டங்களேயாகும்.
இந்த அடிப்படையில்தான் மத்திய அரசு, 1993இல், “தேசிய மனித உரிமைகள் ஆணையம்” அமைத்த பின்னும் மாநில அரசின் சார்பில் தமிழகத்தில் அது அமைக்கப்படாததைக் கருத்தில்கொண்டு; 1996-இல் தி.மு.க. அரசு அமைந்தவுடன், 17.4.1997 அன்று, `மாநில மனித உரிமைகள் ஆணையம்’ தமிழகத்தில் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் ஊனமுற்றோர், மலைவாழ் மக்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகள் போன்ற நலிந்த பிரிவினரின் வாழ்வுரிமையை நிலைநாட்டுவதில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் மனித உரிமைகளைக் காப்பதில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக சாதி, மத, இன, மொழி வேறுபாடு கருதாது; ஆண், பெண் எனும் பால் வேறுபாடின்றி நமது அரசியல் அமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் பெற்றுச் சுதந்திரத்துடன், சமத்துவத்துடன், கண்ணியத்துடன் ஒவ்வொருவரும் வாழ உதவிடுவோம்; ஆதிக்க உணர்வோடு எளியோரை வலியோர் வதைப்பதைத் தடுப்போம்; மனித உரிமைகள் காப்போம் என இந்நாளில் உறுதியேற்போமாக என்று கருணாநிதி கூறியுள்ளார்.