தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் 4 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாநிலத்திலுள்ள 14 பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் நாளை மறுநாளிலிருந்து விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளக் கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
இங்கு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டம் (B.V.Sc. And AH), இளநிலை மீன்வள அறிவியல் பட்டம் (B.F.Sc), இளநிலைத் தொழில்நுட்பப் பட்டம் (உணவு தொழில்நுட்பம்) பி.டெக்., இளநிலைத் தொழில்நுட்பப் பட்டம் (கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) பி.டெக். ஆகிய நான்கு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த பட்டப்படிப்புகளுக்கு 2012-2013ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 14ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 18ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கால்நடை மருத்துவக்கல்லூரி, கோடுவளி பால்வளத் தொழில்நுட்ப நிலையம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் கால்நடை மருத்துவ வளாகத்திலுள்ள சிகிச்சைத்துறை, தூத்துக்குடி மீன்வள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.
தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்துÖர், திருச்சி, ராஜபாளையம், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய 14 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப படிவங்கள் ரூ.600 விற்கப்படுகிறது. இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300. இந்த தொகைக்கு நிதி அலுவலர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-600 051 என்ற பெயரில் கேட்பு வரைவோலை அளிக்க வேண்டும்.
தரவரிசைப்பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதனையடுத்து கலந்தாய்வுக் கூட்டம் ஜூலை கடைசி வாரத்தில் நடக்கிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 226-லிருந்து 260 ஆக உயர்த்தப்படுகிறது என்று பிரபாரகன் கூறினார்.