விபத்தின் போது ஏற்படும் காயத்தின் தன்மையை சீராக மதிப்பீடு செய்ய மருத்துவ குழுவை அமைக்க வேண்டுமென்றும், இதற்காக பாராளுமன்றம் சட்ட திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த பழைய மாமல்லபுரம்-தரமணி சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனமும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் பொறியியல் மாணவர் சிவக்குமார், அவருடைய சகோதரர் கமலகண்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிவக்குமாருக்கு ரூ.18 லட்சமும், அவருடைய சகோதரருக்கு ரூ.3 லட்சத்து 40 ஆயிரமும் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சிவஞானம் ஆகியோர், காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு காயம் அடைந்த சிவக்குமாருக்கு ரூ.18 லட்சத்துக்கு பதில் ஐந்தரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கினால் போதும் என்று தீர்ப்பு அளித்தனர்.
ஏற்கனவே டெபாசிட் செய்த ரூ.18 லட்சத்தில், ரூ.14 லட்சத்தை சிவக்குமார் எடுத்து செலவு செய்துவிட்டதால் மீதி தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வசூலித்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் காயத்தின் தன்மையை சீராக மதிப்பீடு செய்ய மாவட்ட அளவில் ஒரு மருத்துவ குழுவை அமைக்க வேண்டுமென்றும், இதற்காக பாராளுமன்றம் சட்ட திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.