மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்துள்ள மனுவில், ''1998ஆம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவுக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வாக்குப்பதிவு எந்திரத்தை ஆளும் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த கூடாது என கூறி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஆளும் கட்சி துணையோடு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சார்பாக பயன்படுத்த முடியும் என்பதை நிபுணர்களைக் கொண்டு நிரூபிக்க ஒருகாட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மேலை நாடுகளில் பயன்படுத்துவதில்லை. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பானதா என்பதை நிபுணர்கள் குழு கொண்டு அறிய வேண்டும். அதுவரை மின்னணு வாக்குப்பதிவுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மின்னணு வாக்குப்பதிவுக்கு தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே கோரிக்கையை மாற்றி புதிய மனு சமர்ப்பிக்கும்படி கூறினர். மனுதாரரும் அதனை ஏற்று புதிய மனுவை தாக்கல் செய்வதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.