நீலம் புயல் காரணமாக சென்னையில் சரக்கு கப்பல் ஒன்று இழுத்து செல்லப்பட்டு தரை தட்டி நின்றது. அதில் இருந்து தப்ப முயன்ற மாலுமி உள்பட தமிழகத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். கப்பலில் இருந்து தப்பிய 6 பேரின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை.
வங்க கடலில் உருவான ‘நீலம்’ புயல் மாமல்லபுரம் அருகே நேற்று மாலை 4.45 மணிக்கு கரையை கடந்தது. பலத்த காற்று வீசியதால் துறைமுகத்தில் இருந்து ஆறரை கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பிரதீபா காவேரி’ என்ற சரக்கு கப்பல் புயல் காற்றில் சிக்கியது.
புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த கப்பல் சென்னை பெசன்ட்நகரில் பிரம்ம ஞானசபைக்கு பின்புறம் எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தரைதட்டி நின்றது. கப்பல் தரை தட்டியதும், அதில் இருந்த 37 ஊழியர்களில் 21 பேர் உயிர் தப்புவதற்காக கப்பலில் உள்ள உயிர் காக்கும் 3 சிறிய படகுகள் மூலம் கரைக்கு செல்ல முயன்றனர்.
அவர்கள் கரையை நோக்கி வந்த போது காற்று பலமாக வீசியதால் படகுகள் திடீரென கவிழ்ந்தன. இதனால் அவர்கள் கடல் நீரில் விழுந்து தத்தளித்தனர். இதை கரையில் இருந்து பார்த்த மீனவர்கள் படகுகளில் சென்று கடலில் தத்தளித்தவர்களில் 15 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
உடனடியாக அவர்கள் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ் என்ற ஊழியர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சரக்கு கப்பல் தரைதட்டி நின்றது குறித்து தகவல் கிடைத்ததும் சென்னை துறைமுக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். படகுகள் மூலம் தப்ப முயன்று கடலில் விழுந்தவர்களில் 6 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவர்களை கடற்படை, கடலோர காவல்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் மூலம் தேடி கண்டுபிடிக்கும் முயற்சி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
இதனிடையே புயலுக்கு திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா ஒருவரும், வேலூர் மாவட்டத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.