பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பதற்காக மாநகராட்சி அலுவலர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் மடிக்கணினிகள் வழங்கினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், சுகாதார அலுவலர், மாவட்ட குடும்பநல அலுவலர்கள், வருவாய் அலுவலர், விழிப்புப்பணி அலுவலர், மண்டல அலுவலர்கள் ஆகியோருக்கு மேயர் மா.சுப்பிரமணியன் மடிக்கணினிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக இளநிலை பொறியாளர்கள், பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலினால் ரூ.15 லட்சம் செலவில் 960 கை பேசிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது.
இதே போன்று சென்னை மாநகராட்சியின் அனைத்துத் துறைத்தலைவர்கள், 10 மண்டல அலுவலர்கள் பயன்பாட்டிற்கு என மொத்தம் 30 மடிக்கணினிகள் ரூ.15.75 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைத்தலைவர்கள், மண்டல அலுவலர்கள் மேலாண்மை தகவல் அறிவதற்கும், நாள்தோறும் தொடர் பணிகள் மேற்கொள்வதற்கு உறுதுணையாக அமையும். மேலும் சென்னை மாநகராட்சியில் தற்பொழுது கணினி மயமாக்கும் பணிகளுக்காக நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த இணையம் சார்ந்த மின் ஆளுமை முறைக்கும் இந்த மடிக்கணினிகள் பயன்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ராஜேஷ் லக்கானி, துணை மேயர் சத்யபாமா, மன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை ப.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.