சென்னை தாம்பரத்தில் 2ஆம் வகுப்பு மாணவி மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை தீ வைத்து எரித்தனர்.
தாம்பரத்தை அடுத்த சோமங்கலம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகள் லட்சயா (7) அங்குள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி படித்து வந்தாள். பள்ளிக்கூடம் இன்று விடுமுறை என்பதால் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி மாணவி லட்சயா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சயா உடல் நசுங்கி பலியானாள்.
சிறுமி மீது மோதிய லாரி நிற்காமல் வேகமாக புறப்பட்டு சென்றதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை விரட்டி பிடித்து டிரைவரை அடித்து உதைத்ததோடு லாரிக்கு தீ வைத்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைக்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் லாரி எரிந்து சாம்பலானது.
பொதுமக்களிடம் சிக்கிய டிரைவரை மீட்டு போலீசார் காவல்துறையம் அழைத்து சென்றனர். சென்னையில் தொடர்ந்து பள்ளிகள் மாணவிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.