மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே, வாய்க்கால்களில் தூர்வார நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் பெய்த பெருமழை காரணமாக, தென் சென்னை, தியாகராய நகர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பசுல்லா சாலை, அபிபுல்லா சாலை உள்ளிட்ட பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தன.
மேலும், சைதாப்பேட்டை, வேளச்சேரி, ஆயிரம் விளக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல இடங்களும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடு போல் காட்சி அளித்தன. மழை வருவதற்கு முன்பே மாம்பலம் வாய்க்கால், அடையாறு வாய்க்கால் ஆகியவை தூர் வாரப்பட்டிருந்தால் இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது. மழைநீர் வழிந்தோட வழியின்றி, பல சாலைகளில் குளம் போல் நீர் தேங்கியுள்ளது.
இதன் விளைவாக, தார் சாலைகள் கற்குவியலாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசலுக்கும் வழி வகுத்து இருக்கிறது. பல உட்புற சாலைகள் வயல்வெளிபோல் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கின்றன. மழைநீர் குளம் போல் தெருக்களில் தேங்கியிருப்பதன் காரணமாக, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே, மழைக்காலம் வருவதற்கு முன்பாகவே, வாய்க்கால்களில் தூர்வார நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக சீர்செய்ய வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் அ.இ.அ.தி.மு.க. அமைப்புச் செயலர் பி.எச்.பாண்டியன் தலைமையிலும், தென் சென்னை மாவட்ட செயலர் கலைராஜன் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.