தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி, மருத்துவக் கல்வி முதுகலை மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு கூடாது.
ஏற்கனவே தான் எழுதிய கடிதங்களில், பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் கொள்கை முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில், 50 சதவிகித முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள், ஊரகப் பகுதிகளில் மூன்று ஆண்டுகள் பணியாற்றும் மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவம் முடிப்பவர்கள், அரசுப் பணியில் கட்டாயம் பணியாற்றுவதற்கான காலத்தையும் நிர்ணயித்திருக்கிறேன்.
பொது நுழைவுத் தேர்வு குறித்து முடிவு எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்து இருந்ததையும், தமிழகத்தில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதை சுட்டிக் காட்டி தமிழக அரசு இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு பின்பும், எம்.டி.- எம்.எஸ். முதுநிலை படிப்புகளுக்கு பொது தகுதித் தேர்வு நடத்தப்படுமென அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நுழைவுத் தேர்வுக்கு தடை உத்தரவை தமிழக அரசு பெற்றிருந்தும், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது ஆச்சரியமளிப்பதாக கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.