மக்கள் நலப்பணியாளர் சங்கம் தொடர்ந்த மறுபரிசீலனை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உயர் நீதிமன்த்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இதே சங்கத்தைச் சேர்ந்த தலைவர் மதிவாணன், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒரு மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ஏற்கனவே சங்க பொதுச்செயலாளராக இருந்த பழனி சமீபத்தில் நடந்த சங்க தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். இதை உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமலேயே நீதிமன்றத்தில் 5 மாத சம்பளத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இது தவறான தகவலாகும். அவர் பெய்யான தகவல் தெரிவித்துள்ளார். எனவே இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தாக்கல் செய்த தகவலின்பேரில் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தவறான தகவல் என்றால் பழனி மீது சங்கத்தினர் தனியாக கிரிமினல் வழக்கு தொடுக்கலாம். எனவே இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய முடியாது. மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.