போர் முடிந்த பிறகும் தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை : கனிமொழி வேதனை
சென்னை , செவ்வாய், 9 ஜூன் 2009 (09:54 IST)
''
இலங்கையில் போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்குள்ள தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லையே'' என்று தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வேதனையுடன் பேசினார்.
மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசுகையில், நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா 100 நாளில் நிறைவேற்றப்படும் என குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்துள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அந்த மசோதாவிற்கு ஏற்கனவே பல தடைகள் இருக்கின்றன.இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மசோதாவிற்கு தி.மு.க. உறுதியான ஆதரவு அளித்து உறுதுணையாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் தற்போது 58 மகளிர் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு வருத்தமான நிலை இருக்கிறது. இது 10 சதவீதம் மட்டும் ஆகும். மாநிலங்களவையில் 22 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது 9.6 சதவீதம்தான்.எனவே, நமது கொள்கை முடிவுகள் எடுக்கும்போது 50 சதவீதம் இருக்கும் பெண்கள் விடுபட்டுவிடாத வகையில் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக குடியரசுத் தலைவர் உரையில் பெண் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். சமுதாயத்தின் மற்றொரு பிரிவான அரவாணிகளும் புறக்கணிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் அவர்கள் எல்லா வகையான பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.எனவே, அரசு அவர்களுக்கு உரிமையுள்ள குடிமக்களுக்கான அங்கீகாரம் அளிக்க வேண்டும். அரசு திட்டத்தின் பலன்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். தேவைப்பட்டால் அரவாணிகளுக்கு தனியாக ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் ஆகும். கடலோரப் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் வரும். துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது தமிழகத்திற்கும், தென்னகத்திற்கும் அநீதி இழைப்பதாகும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதிநீர் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. எனவே நதிகளை இணைக்கவும், மாநிலங்களின் நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்துவிட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சமகுடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.இப்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய தார்மிக கடமை இந்திய அரசுக்கு உள்ளது. எனவே தமிழர்கள் தங்கள் பூர்வீக மண்ணில் மீண்டும் குடியமர்த்தப்படவும், அவர்களுக்கு அரசியல் உரிமை உள்பட எல்லாவித உரிமைகளும் கிடைத்திடவும் இந்திய அரசு உரிய நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று கனிமொழி பேசினார்.