நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆற்றிலும், மோயாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது/ இன்று காலை எட்டு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 7135 கனஅடி தண்ணீர் வந்தது.
ஈரோடு மாவட்டத்திலும் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும். இதில் சகதி 15 அடியை கழித்து நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 86.58 அடியாக உள்ளது.